Puducherry

கிரண் பேடிக்கு கடும் பின்னடைவு-உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கவர்னராக, கிரண் பேடி, நியமிக்கப்பட்டதில் இருந்து, காங்கிரஸ் முதல்வர், நாராயணசாமிக்கும், அவருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
துணைநிலை கவர்னராக இருப்பதால் , முதல்வரை விட தனக்கு தான் அதிக அதிகாரம் உள்ளது என, கிரண் பேடி கூறி வருகிறார்; அப்படி சட்டத்தில் இல்லை எனக்கூறி அதை, முதல்வர் நாராயணசாமி மறுக்கிறார்.

Image Courtesy: Bar & Bench

இந்த விவகாரம், தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல்வர், நாராயணசாமியின் செயல்பாடுகளில், கவர்னர் தலையிடக் கூடாது; அவருக்கு அதிகாரம் இல்லை’ என, உத்தரவிட்டது. இது கிரண் பேடிக்கு கடும் பின்னடைவாக இருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு :

இவ்வுத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கிரண் பேடி வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, ‘இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிடும் எண்ணம், இந்த நீதிமன்றத்திற்கு இல்லை’ என தெரிவித்து, கிரண் பேடியின் மனுவை, நீதிபதிகள் அதிரடியாக தள்ளுபடி செய்தனர்.

தீர்ப்பு குறித்து, புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி கூறியதாவது:உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என, உத்தரவிட்டதுடன், கிரண் பேடியின், மேல்முறையீட்டு மனுவையும் ரத்து செய்தனர். இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக அமலில் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. கவர்னருக்கு, அரசின் முடிவில் தலையிட அதிகாரம் இல்லை.இந்த தீர்ப்பு, புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த சரித்திர வெற்றி. மக்களால் தேர்வு செய்யப்படும் அமைச்சரவைக்கே முழு அதிகாரம் உள்ளது. ஜனநாயகம் வென்றுள்ளது. புதுச்சேரி மக்கள் வென்றுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

தொண்டர்கள் ஆராவாரம் !

பத்திரிகையாளர் சந்திப்பின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் கே.லட்சுமிநாராயணன் மற்றும் அரசாங்க கொறடா ஆர் கே ஆர் ஆனந்தராமன் ஆகியோருக்கு நாராயணசாமி `லட்டு’களை விநியோகித்தார்.வழக்கமான நிர்வாக விஷயங்களில் லெப்டினன்ட் ஆளுநரின் முறையீட்டை நிராகரித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் தொண்டர்கள் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே பட்டாசுகளை வெடித்தனர்.