Christians Pakistan

பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடத்தப்படும் பாகிஸ்தான் நாட்டு பெண்கள்!

கடந்த 2018 ஆண்டு மட்டும் சுமார் 629 பாகிஸ்தானிய பெண்களை திருமணம் முடித்து அழைத்துப்போகிறோம் என்கிற பெயரிலும், வேலை வாங்கித்தருகிறோம் என்கிற பெயரிலும் சீனர்கள் வந்து பணம் கொடுத்து அழைத்துச்சென்றுள்ளனர். பாகிஸ்தான் நீதிமன்றம் இதனை ஆட்கடத்தல் புகாராக பதிவு செய்து தற்போது விசாரணையை துவக்கியுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தானில் இருக்கும் கிறுஸ்தவப்பெண்களே இதற்கு பலியாகியுள்ளனர். அவர்களை சீனர்களுக்கு விற்க உதவியது அந்நாட்டு திருச்சபை ஊழியர்களில் சிலரும், கடத்தப்பட்ட பெண்களின் உறவினர்களுமே ஆவர். கடந்த 2015ம் ஆண்டு முதல் பாக்-சீன புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருளாதார மையம் (CPEC : China – Pak Economical Corridor) ஒன்று அமைக்கப்பட்டு, சுமார் $75 பில்லியன் டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் சீனா தனது பழைய ஆசிய தொடர்பினை புதுப்பிப்பதன் மூலம் தங்களது உறவினை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்கிற நோக்கில் பாகிஸ்தானில் பவர் பிளான்ட், ரோடுகள், இரும்புப் பாதைகள் மற்றும் மின்சார நிலையங்களை அமைத்து வந்தது.

இதன் வழியாக பாகிஸ்தானினுள் புகுந்த சீனா தற்போது சிந்து நதிநீர் திட்டம் எனும் பெரிய திட்டத்தை கையிலெடுத்து செயலாற்றி வருகிறது. 2015 முதலே சீனர்களில் இருக்கும் கிறுஸ்தவர்கள் பலர் பாகிஸ்தான் கிறுஸ்தவ பெண்களை முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். பலர் சீனாவிற்கும் அழைத்துச்சென்றனர். இதற்கு ஒரு பெண்ணுக்கு 1 – 3 மில்லியன் வரையிலும் பணமும் கொடுத்துள்ளனர்.

திருமணம் செய்து கூட்டிக்கொண்டு போன பெண்கள் அனைவரும் சீனாவில் விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என்கிற அதிர்ச்சித்தகவலை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் சுமைரா என்கிற ஒரு கிறுஸ்தவப்பெண். தன்னை மனம் பேசி முடித்தவர் ஒருவராகவும் , திருமணம் செய்யப்போகிறவர் வயதான கிழவர் எனவும் இதற்கு உடந்தையாக எனது குடும்பத்தினரே உள்ளனர் எனவும் ராவல்பிண்டி காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார்.

சீன நாட்டவரை மணந்த பாகிஸ்தான் கிறிஸ்துவ பெண் மகேக் லியாகத் தனக்கு நேர்ந்ததை எண்ணி அழுகிறார்

இவரை போலவே குஜ்ரன்வாலா பகுதியை சேர்ந்த மாஹேக் எனும் மற்றோரு 19 வயதுப்பெண் கூறுகையில் தன்னை திருமணம் முடிந்தவர் 22 வயதுக்காரர் என்றும், திருமணம் முடித்த மறுநாளே அவரது கணவர் மேலும் நால்வரை அழைத்துவந்து தன்னை தவறாக நடக்க கட்டாயப்படுத்தியதாகவும் கூறி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

பாகிஸ்தான் பெண்கள் தவிர சீனாவிற்கும் சிங்கப்பூருக்கும் விபச்சாரம் மற்றும் பார்களில் பணிபுரிய தள்ளப்படவே தாய்லாந்து, கொரியா,வியட்நாம் மற்றும் நேபாளத்து பெண்களையும் இந்த கும்பல் கடத்தியுள்ளதாக தெரிகிறது. இவர்களில் பலர் பெண்கள் பலரை மதம்மாற்றம் செய்யவும் முயற்சித்துள்ளனர். மறுத்துவிட்ட பெண்களை ஆட்கடத்தல் சந்தையில் பேரம் பேசி விற்றுள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கைதாகியுள்ள 31 சீனர்களை, பாகிஸ்தான் நீதிமன்றம் சிறையில் அடைத்து விசாரித்து வருகிறது.

ஆக்கம் : நஸ்ரத்