Gyanvapi Mosque Hindutva

‘கியான்வாபி பள்ளியில் தொழும் முஸ்லிம்களின் தலையை வெட்டுவோம்’ : பஜ்ரங் தள் உறுப்பினர் மிரட்டல்!

கியான்வாபி மசூதியில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்களை கொலை செய்யப்போவதாக பஜ்ரங் தள் தொண்டர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இரண்டு நாட்களாக இணையத்தில் பரவி வரும் வீடியோ ஒன்றில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் பண்டிட் ரவி சோங்கர் என்ற வலதுசாரி நபர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வன்முறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“இந்த மக்கள் (முஸ்லீம்கள்) பல ஆண்டுகளாக தங்கள் அழுக்கு கைகளையும் கால்களையும் சுத்தம் செய்ய எங்கள் சிவலிங்கத்தைப் பயன்படுத்தியது வருத்தமளிக்கிறது. அவர்களின் தலைகளை வெட்டுவோம்” என்று ரவி சோங்கர் மிரட்டுவது வீடியோவில் உள்ளது.

முதலில் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ இரண்டு நாட்களாக ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ரவி சோங்கர் மீது போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

இருப்பினும் ரவி சோங்கர் அந்த வீடியோ ட்விட்டரில் அம்பலப்படுத்தபட்ட பின்னர் அக்காணொளி நீக்கப்பட்டுள்ளது, போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து தற்போது நீக்கியிருக்கலாம்.

கியான்வாபி மசூதி வழக்கின் விசாரணையை மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், மேலும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வாரணாசி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

கியான்வாபி மஸ்ஜித் விவகாரம்:

காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டிய கியான்வாபி மசூதி, முகலாய பேரரசர் ஔரங்கசீப்பால் 1669 ஆம் ஆண்டு இந்து கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்காமல் இந்துத்துவா தரப்பு கூறி வருகிறது.

கடந்த மே 7 ஆம் தேதி, தில்லி பெண்கள் குழு ஒன்று வாரணாசி நீதிமன்றத்திற்குச் சென்று காசி விஸ்வநாதர் கோயில்-கியான்வாபி வளாகத்தில் உள்ள மசூதியை ஒட்டியுள்ள பகுதியில் வழிபாடு நடத்த அனுமதி கோரி இருந்தனர்.

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதிக்கு பின்னால் உள்ள இந்து கோவிலுக்குள் நுழையக் கோரிய மனு தொடர்பாக, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் குழு மே 6 அன்று ஆய்வு நடத்தியது. வீடியோ ஆய்வு அறிக்கை மே 17 அன்று நிறைவடைந்தது. சில இந்து மனுதாரர்கள் மசூதியில் உள்ள ஒளு செய்யுமிடத்தில் “சிவ-லிங்கம்” போன்ற அமைப்பு காணப்பட்டதாகக் கூறினர். இது ஒரு நீரூற்று என்றும் “சிவ-லிங்கம்” அல்ல என்றும் கூறிய முஸ்லிம் மனுதாரர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படாமல் இருக்க வேண்டும் என கூறி முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த இடத்தில் சீல் வைக்கப்பட்டது. மே 17 அன்று, உச்ச நீதிமன்றம் வாரணாசி நீதிமன்றத்திற்கு “சிவ்-லிங்கம்” (சிவ லிங்கம் என நிறுவப்படாமலேயே) கண்டுபிடிக்கப்பட்ட (நீரூற்று) பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே சமயம் தொழுகை செய்ய வரும் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.